ராஜ்யசபா-6 பேரும் வென்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று யாரும் மனுவை வாபஸ் பெறாத நிலையில், 6 பேருமே தேர்வு செய்யப்பட்டதாக சட்டசபை செயலாளரும் ராஜ்யசபா தேர்தல் அதிகாரியுமான செல்வராஜ் இன்று அறிவித்தார்.
தமிழகத்தில் காலியான 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் திமுக சார்பில் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் மத்திய இணையமைச்சர் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், அதிமுக சார்பில் பாலகங்கா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இன்னொரு இடத்துக்கு மதிமுக தலைவர் வைகோவை நிறுத்த முயன்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முயற்சி பலனளிக்கவில்லை.
அதே போல இந்தத் தேர்தலில் சீட் கேட்டு பெரும் குழப்படி செய்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் கடைசி நேரத்தில் அந்தரத்தில் பல்டியடித்து திமுக கூட்டணிக்கே வாக்கு என்று அறிவித்தார்.
இதனால் போட்டியே ஏற்படவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான 15ம் தேதியன்று 6 மனுக்கள் மட்டுமே தாக்கலாயின. முறையாக தாக்கலாத 4 சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடியாகிவிட்டன.
இதையடு்த்து இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். யாரும் வாபஸ் பெறாததால் 6 பேரும் வென்றதாக அறிவி்க்கப்பட்டு அதற்கான சான்றிதழ்களை செல்வராஜ் வழங்கினார்.
பாலகங்கா-கொண்டாடும் கேரளா:
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற பாலகங்காவுக்கு பூர்வீகம் கேரளா ஆகும். இதையடுத்து இன்றைய கேரள பத்திரிக்கைகளில் மலையாளியான பாலகங்காவுக்கு ஜெயலலிதா சீட் கொடுத்தது குறித்து பெரிய அளவில் செய்திகள் வெளியாகியுள்ளன.