சிதம்பரம் கோயில் அரசுடைமை: கோர்ட் தடை நீக்க நடவடிக்கை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்று நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கிராம கோயில் பூசாரிகள் நலவாரிய கூட்டம் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் சென்னையில் நடந்தது. இதன் பின்னர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடுவது தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதில் தமிழக அரசு சரியான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தப் பணியை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைய துறையினர் ஏற்று நடத்துவதற்கு தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர்.
இந்தத் தடையை நீக்கி சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.