கொல்லம் பாசஞ்சர் தடம் புரண்டது-13 பேர் படுகாயம்
மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் பாசஞ்சர் ரயில் இன்று அதிகாலை 4 மணியளவில் வள்ளியூரை அடுத்துள்ள பனகுடி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென ரயில் தடம் புரண்டது. 6 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் 2 பெட்டிகள் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 பயணிகள் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்தனர். ரயில்வே அதிகாரிகள், போலீஸாரும் விரைந்து வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
மழை காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் பலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தால் அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நெல்லையிலேயே நிறுத்தப்பட்டன. அதில் பயணித்த பயணிகளை பஸ்கள் மூலம் நாகர்கோவிலுக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவே கொல்லம் பாசஞ்சர் தடம் புரண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துள்ளது.
விவரம்:
சென்னை எழும்பூர் -நாகர் கோவில் எக்ஸ்பிரஸ், நெல்லை, கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நெல்லை, நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ், நாகர்கோவில், வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் -திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை, திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
மும்பை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்படும்.
குருவாயூர் - சென்னை எழும்பூர் கூடல் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில், திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில் - கோவை பாசஞ்சர் ரயில், நாகர்கோவில், மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.