For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் இன்னொரு கடல்நீர்-குடிநீர் திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

Anbazhagan
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் இன்னும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது

சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மீஞ்சூரில் கடல் நீரிலிருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு வரும் ஜூன் மாதத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் குடிநீரும், செப்டம்பர் மாத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீரும் சென்னை மாநகருக்கு கிடைக்கும்.

இது தவிர கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலியில் கடல் நீரில் இருந்து நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் மற்றொரு நிலையம் ரூ. 994 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் நிதி உதவியுடன் இத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மத்திய அரசின் இந்தாண்டு பட்ஜெட்டில் இத் திட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூவம் கரையோரம் சாலை:

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி மற்றும் மாம்பலம் கால்வாய் ஆகியவற்றின் கரைகளில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.

120 கி.மீ வட்டச் சாலை:

இந்த சாலைகளை சென்னை புறவழிச் சாலையுடன் இணைக்கும் வகையில் அதிவேக வட்டச்சாலை ஒன்று அமைக்கப்படும்.

120 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த வட்டச் சாலை, நான்கு முதல் ஆறு வழிப் பாதைகளை கொண்டதாக அமையும்.

இதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்படவுள்ள 60 கிலோ மீட்டர் நீங்கலாக, எஞ்சியுள்ள 60 கிலோ மீட்டர் சாலையை மாநில அரசே அமைக்கும்.

இத் திட்டத்தின் மூலமாக, சென்னையின் மையப் பகுதிகளிலிருந்து தாம்பரம், ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப சாலை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற முக்கிய பகுதிகளுக்கும்,

சென்னையிலிருந்து திருப்பதி, பெங்களூர், கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களுக்கும் சென்று வரும் வாகனங்கள் தாமதமின்றி மிக விரைவாக செல்ல முடியும்.

ரூ. 2,300 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்தால், சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் காணப்படும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்க இயலும்.

புதிய மின் நிலையங்கள்:

தமிழகத்தின் மின் தேவையை அதிகரிக்க வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய பிரிவை அமைக்கும் பணிகள் ரூ.2,475 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கூடுதலாக 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட ஓர் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்திலும் கூடுதலாக 1,000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட நிலையத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இவை தவிர, வடசென்னையில் 1,500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட புதிய மின் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 1,600 மெகாவாட் உற்பத்தி செய்யக்கூடிய புதிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்திடவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பின்தங்கிய பகுதிகளில் பொருளாதார மண்டலங்கள்:

சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழிற்சாலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 260 ஏக்கரில் தோல் சிறப்பு தொழில் பொருளாதார மண்டலமும், செய்யாறில் 255 ஏக்கரில் தானியங்கி உதிரி பாக சிறப்பு பொருளாதார மண்டலமும் அமைக்கப்படும்.

கங்கைகொண்டானில் 250 ஏக்கரில் போக்குவரத்து பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 263 ஏக்கரில் என்ஜினியரிங் குட்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 32 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மண்டலங்களால் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அந்தந்தப் பகுதிகளின் பொருளாதார நிலையும் பெருமளவில் மேம்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X