பர்னாலாவுக்கு இதய அறுவை சிகிச்சை
சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு நேற்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
நேற்று முன் தினம் பர்னாலாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாயில் இரு இடங்களில் அடைப்பு எற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று மாலை டாக்டர் எம்.ஆர்.கிரிநாத் தலைமையிலான மருத்துவக் குழு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்தது.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கவர்னர் பர்னாலாவுக்கு பைபாஸ் சர்ஜரி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி நேற்று மாலை மருத்துவமனைக்குச் சென்றார். கவர்னரின் மனைவி சுர்ஜித் கவுர், மகன்கள் ஜஸ்ஜித் சிங் பர்னாலா, ககன்ஜித் சிங் பர்னாலா, மருமகன் மேஜர் சந்து ஆகியோரிடம் கவர்னரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.