காவிரி-வைகை, தாமிரபரணி-நம்பியாறு நதிகளை இணைக்க திட்டம்
இது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக நதிகளை இணைக்கும் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும். முதல் கட்டமாக தென் மாவட்டங்களில் ஓடும் தாமிரபரணி ஆறு- கருமேனியாறு- நம்பியாறு ஆகிய நதிகள் ரூ. 369 கோடி செலவில் இணைக்கப்படும்.
இதன்மூலம் தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.
அதே போல காவிரி ஆற்றின் உபரி நீரை பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல காவிரி - அக்கினியாறு- கோரையாறு- பாம்பாறு- வைகை நதி- குண்டாறு ஆகியவை இணைக்கப்படும். இதன் முதல்கட்டமாக காவிரியாற்றின் குறுக்கே கட்டளை பகுதியில் தடுப்பணை கட்டப்படும்.
சான்று கேட்பின், சரித்திர காலந்தொட்டு தமிழ்மண்ணை செழிக்கச் செய்திட நட்புறவு கொண்டிருந்த கர்நாடகத்தின் காவிரிப் பிணக்கு - பாலாறு - முல்லைப் பெரியாறு என இணக்கம் ஏற்படாத இடையூறுகள்! உரிமையுள்ள குடிதண்ணீரைக்கூட கொடுக்க முடியாதென குறுக்கே நிற்கும் கொடுமை!.
ஒரே இந்தியா-ஒரே நாடு-ஒரேதேசம்-இமயம் முதல் குமரி வரை இந்நாட்டு மக்கள் - இந்திய மக்கள் என்பதெல்லாம் ஏட்டில் எழுத்தாக மட்டுமே ஒளிவிடுகின்றனவே அல்லாமல்; ஒற்றுமை - ஒருமைப்பாடு - இறையாண்மை இவையனைத்தும் கேள்விக்குறிகளாகி; நமது தமிழகத்தின் தேவைகளும் கோரிக்கைகளும் கேலிப்பொருள்களாகி விடுகின்றன.
இந் நிலையில், முக்கி முனகி, மூச்சிறைக்க - முட்டுக்கட்டைகளைக் கடந்து, திட்டங்களைத் தீட்டி மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாக நிலையாக முன்னேறுவதற்குத் துணை நிற்க முன்வராமல்; மத்திய அரசும் பாராமுகமாக இல்லாமல் நமது உரிமைக்குப் பாதுகாப்பாக இருந்திட வேண்டும் என்கிற நமது வேண்டுகோளை ஒருபுறம் வலியுறுத்தியவாறு; மறுபுறம் வளம் பெருக்கித் தமிழகம் வாழும் வலிமை பெற அனைவரும் அணிவகுத்து நிற்போம் என்று கூறப்பட்டுள்ளது.