ஹோலி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகம்
டெல்லி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாகவும், வண்ணமயமாகவும் கொண்டாடப்பட்டது.
வசந்த காலத்தை வரவேற்க இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைதான் ஹோலி. பல காலமாகவே வட இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த ஹோலி சமீப காலமாக இந்தியாவின் இதர பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இன்று ஹோலி வழக்கமான உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் ஹோலி படு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் கொண்டாடினர்.
புதுவிதமாக தண்ணீர் நிரப்பிய வண்ண பலூன்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஹோலி கொண்டாட்டத்தையொட்டி தலைநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. வேன்கள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீஸார் ரோந்து சென்றனர்.
சென்னையில் ..
சென்னையிலும் ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட இந்தியர்களும், மார்வாடிகளும் அதிக அளவில் வசிக்கும் செளகார்பேட்டை பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரைத் தெளித்தும் வட இந்தியர்கள் ஹோலியைக் கொண்டாடினர்.
நடனம், பாட்டுப் பாடுதல் உள்ளிட்ட கோலாகல வைபவங்களும் கொண்டாட்டத்தில் இடம் பெற்றிருந்தன. சென்னை நகரின் இதர பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டத்தைக் காண முடிந்தது.