ரூ. 60 லட்சம் ஹெராயின் பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை: சென்னையில், ரூ. 60 லட்சம் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது. இதுதொடர்பாக இலங்கைத் தமிழர்கள் உள்பட 3 பேரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பிடிபட்ட மூன்று பேரிடமிருந்தும் 590 கிராம் ஹெராயின் பறிமுதல்
செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ. 60 லட்சம் ஆகும்.
மார்ச் 20ம் தேதி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கார் சிக்கியது. அதில் இருந்த இலங்கைத் தமிழரான ஜெயபாஸ்கரன் (53) மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்களிடம் ஹெராயின் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில்,
மண்ணடி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜுக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
அங்கு தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முகம்மது மெஹரூப் என்கிற ராஜாவைக் (52) கைது செய்தனர்.
3 பேரும் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.