அதிமுகவில் ஜெயலலிதாவுக்கே பாதுகாப்பில்லை-ஜோதி
சென்னை: நான் பாதுகாப்பு தேடித்தான் திமுகவில் இணைந்தேன். ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கிறார். அதற்கு யார் காரணம் என்பதற்கு காலம் மிக விரைவில் பதில் சொல்லும் என வழக்கறிஞர் ஜோதி கூறினார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களிடம் ஜோதி பேசுகையில்,
திமுகவில் சேர வேண்டும் என்று முன்பே திட்டமிடவில்லை. இந்தப் பெருமை அவர்களைத்தான் (ஜெயலலிதா, சசிகலா) சாரும். என்னை இங்கே உறுப்பினராக சேர்கக் கூடிய அளவுக்கு தள்ளி விட்டார்கள்.
தொடர்ந்து நான் பணி செய்ய முடியாத அளவுக்கு மிரட்டல்கள், தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல்கள். குடும்ப வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு பயமுறுத்தல்கள்.
இன்னும் வெட்ககக்கேடான விஷயம். நாடாளுமன்றத்திலேயே என்னைத் தாக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில பணிகள் காரணமாக நான் நாடாளுமன்றத்திற்குப் போக முடியவில்லை. நான் அங்கே போனால் என்ன செய்ய வேண்டும் என்று கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாதுகாப்பு தேடித்தான் இங்கு (திமுகவுக்கு) நான் வந்திருக்கிறேன். நான் பணம் வாங்கி விட்டேன் இதற்கு காரணம் சொல்வார்கள். பாதுகாப்பும், இனமான உணர்வும் தேடித் தான் இங்கு வந்தேன்.
நான் திமுகவுக்கு எந்த நல்லதையும் செய்ததில்லை. எவ்வளவோ கெடுதல்களைத் தான் செய்திருக்கிறேன். ஒரு வழக்றிஞராக திமுகவுக்கு நிறைய கெடுதல்களைத்தான் செய்திருக்கிறேன்.
ஸ்டாலினுக்கும் கெடுதல் செய்துள்ளேன். ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போல இதை சொல்கிறேன். இப்படியெல்லாம் திமுகவுக்கு கெடுதல் செய்தாயே, உன்னை எப்படி மன்னிப்பது என்று யாரும் இங்கு என்னிடம் கேட்கவில்லை.
நான் அப்ரூவர் ஆகவில்லை. ஆகவும் மாட்டேன். நான் துரோகி அல்ல.
அதிமுகவிலிருந்து வேறு யாரும் வருவார்களா என்று கேட்கிறீர்கள். அதிமுகவே வரும் வாய்ப்பு உள்ளது என்பதுதான் உண்மை.
பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. இதை உங்கள் (பத்திரிக்கையாளர்கள்) மூலமாக தலைவருக்கு (கருணாநிதி) சொல்லிக் கொள்கிறேன்.
ஒரு வழக்கறிஞராக நான் பணியாற்றவே விரும்புகிறேன். பதவியை எதிர்பார்த்து நான் வரவில்லை. பிறகு இதற்காகத்தான் வந்தேன் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
ஜெயலலிதா வழக்குகள் குறித்து இங்கு யாரும், என்னிடம் எதுவும் பேசவில்லை. நானும் பேச மாட்டேன். இங்குள்ளவர்களுக்கு நாகரீகம் தெரியும். எனக்கும் நாகரீகம் தெரியும்.
என்னைப் பொறுத்தவரையில் நான் எங்கு இருக்கிறேனோ, அங்கு விசுவாசமாக இருப்பேன். அந்த இடத்திற்காக உண்மையாக உழைக்கக் கூடியவன். என்னுடைய உண்மை ஊழியத்தில் யாரும் குறை சொன்னது கிடையாது.
நான் திறமைசாலியோ, இல்லையோ எனக்குத் தெரியாது. நிலைமைகளைப் புரிந்த பிறகும் நான் அங்கே ஒழுக்கமாகத்தான் இருந்தேன். அவசரப்படக் கூடாது என்றிருந்தேன். அதற்குரிய மரியாதை எனக்கு கிடைக்கவில்லை.
அதிமுகவிலில் உள்ள மாவட்ட செயலாளர்களும், பொறுப்பாளர்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை உள்ளது.
அதிமுகவில் இருந்து பலரும் வெளியேற சசிகலா தான் காரணம். அவரை ஏன் ஜெயலலிதா தடுக்க மறுக்கிறார் என்று தான் தெரியவில்லை.
ஜெயலலிதாவே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கிறார். அதற்கு யார் காரணம் என்பதற்கு காலம் மிக விரைவில் பதில் சொல்லும் என்றார் ஜோதி.