பிரணாப் முகர்ஜி யு.எஸ். பயணம் - அணு ஒப்பந்தம் குறித்து விவாதம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்துடன் விவாதிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அமெரிக்கா சென்றுள்ளார்.
நேற்று இரவு அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்ற பிரணாபுடன், மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனனும் உடன் சென்றுள்ளார். நாளையும், நாளை மறுநாளும் அமெரிக்க நிர்வாகத்துடன் பிரணாப் முகர்ஜி விவாதிக்கவுள்ளார்.
தனது அமெரிக்க பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷையும் பிரணாப் முகர்ஜி சந்திக்கிறார். அப்போது இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மேலும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கான்டலீசா ரைஸையும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் ஹாட்லிையயும் பிரணாப் சந்திக்கிறார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் நிலை, சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து அமெரிக்க தலைவர்களிடம் பிரணாப் எடுத்துரைப்பார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை, அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்க வேண்டும் என இடதுசாரிகள் வலியுறுத்தி வரும் நிலையில் பிரணாப் முகர்ஜியின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜூலை மாதத்திற்குள் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு இந்தியா உடன்பட வேண்டும் என அமெரிக்கா ஏற்கனவே கெடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.