நிவாரண உதவி விழாவில் அமைச்சர் பொன்முடிக்கு நெஞ்சுவலி
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் நடந்த நிவாரண உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், மழையில், மின்சாரம் தாக்கி பலியான பழனி என்பவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பொன்முடி கலந்து கொண்டு பழனியின் குடும்பத்தினருக்கு ரூ. 1லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாமல் காரில் போய் அமர்ந்தார்.
உடனடியாக அவரை மரகதம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் வேறு ஒரு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமியும், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வமும் விழுப்புரம் விரைந்து பொன்முடியைப் பார்த்து நலம் விசாரித்தனர்.
பிறகு பொன்முடி சென்னை கொண்டு வரப்பட்டார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.