திருச்சி, மதுரை-பெங்களூர் கூடுதல் ரயில் விட கோரிக்கை
திருச்சி: பெங்களூருக்கு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து கூடுதலாக இன்னொரு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சேவை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் சேகரன் இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துவிட்டது. ஆனாலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதை கருத்தில் கொண்டு தூங்கும் வசதி கொண்ட மேலும் இரு ரயில்களை திருச்சி மற்றும் மதுரையிலிருந்து இயக்க வேண்டும்.
திருச்சியிலிருந்து பல ஆண்டுகளாக இயக்கப்பட்ட ரயிலை மயிலாடுதுறை வரை நீட்டித்துவிட்டதால் திருச்சி பயணிகள் பெரும் சிரமத்துள்ளாகி வருகின்றனர்.
அதே போல திருச்சி-அகமதாபாத் இடையிலான ரயிலை காரணமே சொல்லாமல் திடீரென ரத்து செய்துவிட்டனர். அதையும் மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.