'ஓகேனக்கல்': தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்- ராமதாஸ்
புதுச்சேரி: தமிழக பகுதியான ஓகேனக்கல்லை கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதை தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை, திருவிழா காலங்களில் மதுக்கடைகளை மூடி விடலாம். மாலை 5 மணி முதல் 8 மணி வரை மதுக்கடைகளைத் திறந்தால் போதும்.
எங்கள் கட்சியினரிடம் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவதுடன், கட்சியினரிடம் மது பழக்கத்தை ரகசியமாக கண்காணித்து வருகிறோம்.
ஓகேனக்கல் பிரசச்னைக்காக பாமக, போராட்டம் நடத்தி உள்ளது. அவர்கள் மீண்டும் பிரசச்னை செய்தால் “பெங்களூர் என்பதை எங்களூர்" என்றும், “கோலார் தங்க வயல் எங்கள் வயல்" என்றும் சொல்லக்கூடிய நிலை வரும் என, எங்கள் கட்சித் தலைவர் மணி கூறியுள்ளார்.
ஓகேனக்கல்லை கர்நாடகம் சொந்தம் கொண்டாடுவதில் துளியும் நியாயமில்லை. இதைப் பார்த்துக் கொண்டு தமிழர்கள் சும்மா இருக்க மாட்டார்கள் என்றார் ராமதாஸ்.
வெள்ளத்தில் பலி-ரூ. 5 லட்சம் தர வேண்டும்:
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் பருவம் தவறி கடந்த ஒரு வார காலமாகப் பெய்து வரும் பெரும் மழையால் அனைத்து தென் மாவட்டங்களுடன், கடலூர், விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வரலாறு காணாத வகையில் பெய்துள்ள இந்தப் பெரு மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அரசின் நிவாரண உதவிகள் உடனடியாகச் சென்றடைய வேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்ட பின்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையும் என்கிற பழைய காலத்து நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
புயல், மழை, வெள்ளம் முதலான இயற்கை பேரழிவுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் வசதியாக மாநில அளவில் ஒரு மறுவாழ்வு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்.
கோட்டையிலிருந்து ஆணைகள் வர வேண்டும் என்று காத்திருக்காமல் இந்த மறுவாழ்வு ஆணையமே உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக இந்த நிறுவனத்திற்கென்று எதிர்பாரா செலவு நிதியினை ஆண்டுதோறும் அரசு ஒதுக்கித் தர வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் நிவாரண உதவிகள் சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தை இந்த ஏற்பாடு வெகுவாகக் குறைத்து விடும்.
அரசு வழங்குகின்ற நிவாரண உதவிகளைப் பொறுத்த வரையில் அளவில் அவை சிறியதாக இருந்தாலும், உரிய காலத்தில் அது வழங்கப்பட வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகள் குறித்து அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. உயிரிழந்வர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி உதவியை ரூ. 1 லட்சத்திலிருந்து குறைந்தது ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண்டும்.
அதே போல வீடிழந்தவர்களுக்கு ரூ.2,000, 5 கிலோ அரிசி, இலவச வேட்டி, சேலை என்ற வழக்கமான உதவிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
வீடுகளை இழந்தவர்களுக் கான நிவாரணம் குறைந்தது ரூ.10,000 ஆகவும் ரூபாயாகவும், பயிர்ப் பாதிப்புக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு குறைந்தது ரூ.50,000மும் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.