சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா
சத்தியமங்கலம்: பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழா இன்று நடந்தது.
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.40 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். ஏராமான பெண்கள் கையில் குழந்தைகளுடன் தீ மிதித்தனர்.
இந்த கோவிலில் சிறப்பு விஷேசமாக கால்நடைகளும் குண்டம் இறங்கும். இந்த ஆண்டும் ஏராளமான ஆடு, மாடுகள் தீ மிதித்தன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்தனர். பெண்கள் மஞ்சள் உடை தரித்து கைகளில் தீச்சட்டி ஏந்தியும் வந்தனர்.
இந்த விழாவையொட்டி கோபி, ஈரோடு, தாராபுரம், காங்கயம், பவானி கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சிறப்பு பஸ்கள் பண்ணாரியம்மன் கோவிலுக்கு இயக்கப்பட்டன.
இந்த விழாவையொட்டி 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி சஞ்சய் அரோரா தலைமையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.