பாக். பிரதமராக கிலானி பதவியேற்பு- ஷெரீப் புறக்கணிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக சயீத் யூசுப் ரஸா கிலானி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
ஆனால், இந்த நிகழ்ச்சியை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் சர்தாரி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் புறக்கணித்துவிட்டனர். இவர்களது கட்சிகள் தான் கூட்டாக இந்த அரசை அமைத்து கிலானியை பிரதமராக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று நடந்த நாடாளுமன்றத் தலைவருக்கான தேர்தலில் அவர் முஷாரப் ஆதரவு வேட்பாளரான பர்வேஸ் இலாஹியை படு தோல்வி அடையச் செய்தார் கிலானி.
பாகிஸ்தான் மக்கள் கட்சி - நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி கூட்டணியின் சார்பில் கிலானி வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து முஷாரப் ஆதரவு முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் பர்வேஸ் இலாஹி நிறுத்தப்பட்டார்.
நேற்று நாடாளுமன்றத் தலைவரை (பிரதமர்) தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில், கிலானிக்கு 264 வாக்குகள் கிடைத்தன. இலாஹிக்கு வெறும் 42 ஓட்டுக்களே கிடைத்தன.
இதையடுத்து கிலானி நாடாளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் டாக்டர் பஹ்மிதா மிர்ஸா முறைப்படி அறிவித்தார். மேலும், இது தொடர்பாக அதிபர் முஷாரப்புக்கும் அவர் அதிகாரப்பூர்வ தகவலை அனுப்பி வைத்தார்.
கிலானி வெற்றி பெற்றதையடுத்து நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், நாடு முழுவதும் பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் பெனாசிர் வாழ்க என்று கோஷமிட்டும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
இன்று கிலானி பாகிஸ்தான் பிரதமராக முறைப்படி பதவியேற்றார். அவருக்கு அதிபர் பர்வேஸ் முஷாரப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானின் 15வது பிரதமர் கிலானி என்பது குறிப்பிடத்தக்கது.
நவாஸ், சர்தாரி புறக்கணிப்பு:
இதற்கிடையே இன்று நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவை நவாஸ் ஷெரீப் கட்சி புறக்கணித்தது.
முஷாரப் அதிபர் பதவியில் நீடிப்பதை அந்தக் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந் நிலையில் முஷாரப், கிலானிக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பதை எதிர்த்து இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியை ஷெரீப் கட்சி புறக்கணித்தது.
அதே போல பெனாசிரின் கணவர் சர்தாரியும் அவரது மகனும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.