வெள்ள சேதம்: மத்திய நிபுணர் விரைவில் வருகை
சென்னை: தமிழக மழை, வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு விரைவில் தமிழகம் வரும் என்று தெரிகிறது.
கன்னியாகுமரி கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட வட பகுதிகளிலும் அடை மழை கொட்டித் தீர்த்தது.
இந்த மழை காரணமாக லட்சக்கணக்கான ஏக்கர் நெல், வாழை, உளுந்து, கடலை உள்ளிட்ட பயிர்கள் சேதமடந்துள்ளன. 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பெரும் பொருட் சேதமும் ஏற்பட்டது.
மழை, வெள்ள நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி பலமுறை ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். ரூ. 110 கோடி நிவாரண நிதியும் ஒதுக்கப்பட்டது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்வதற்கு வசதியாக சட்டசபையும் 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு மக்களிடம் குறை கேட்டனர். நிவாரண உதவிகளையும் வழங்கினர்.
இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நேற்று மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மழை, வெள்ள நிலவரம் குறித்து அமைச்சர்கள் முதல்வரிடம் விளக்கினர். அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் நிதியுதவி கோர முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப்படவுள்ளது. இதையடுத்து மத்திய நிபுணர் குழு விரைவில் தமிழகம் வந்து வெள்ள பகுதிகளைப் பார்வையிட்டு நேரடி ஆய்வு நடத்தும். அதன் பின்னர் மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதியுதவி செய்யும் என்று தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட ெபரும் வெள்ள பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு ரூ. 1500 கோடி நிதியுதவி கோரியிருந்தது. ஆனால் அதுவே இன்னும் வந்து சேரவில்லை. இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரும் சேதத்தை தமிழகம் சந்தித்துள்ள நிலையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும் எனத் தெரிகிறது.