வெள்ள பாதிப்பு: பயிர் நஷ்டத்திற்கு கூடுதல் நிவாரண உதவி அறிவிப்பு
மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் பார்வையிடுவதற்கு வசதியாக கடந்த 2 நாட்களுக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் சட்டசபை கூடியது.
சபை கூடியதும் மழை, வெள்ள பாதிப்பு குறித்து விவாதிக்க வசதியாக, கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் மீது அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசினர். சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பேசுகையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை போதாது. அதை கூடுதலாக்கி அறிவிக்க வேண்டும் என்று கோரினர்.
உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பின்னர் பதிலளித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசுகையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு ஏற்ப உயர்த்தப்படுகிறது.
அதன்படி, ஏக்கருக்கு ரூ. 3000 இழப்பீடும், ஹெக்டேருக்கு ரூ. 7500ம் வழங்கப்படும்.
மழை, வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளை சீரமைக்க ஒரு குடிசை வீட்டுக்கு ரூ. 2000 தரப்படும். இதுதவிர 5 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், வேட்டி, சேலை ஆகியவையும் வழங்கப்படும்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடாக, ஒரு கால்நடைக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடால் ஏற்படும் நிதிச் சுமையை தமிழக அரசு ஏற்கும் என்றார் ஸ்டாலின்.