அல்-உம்மாவினர் வெடிகுண்டு கடத்திய வழக்கில் ஏப்ரல் 9ல் தீர்ப்பு
கோவில்பட்டி: அல்-உம்மா இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் கடத்திய வழக்கில் ஏப்ரல் 9ல் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவில்பட்டி சப்-கோர்ட் நீதிபதி அறிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மதுசூதனன். கார் டிரைவர். 1992ம் ஆண்டு இவரது காரில் அல்உம்மா இயக்கத்தை சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி, அப்துல் முத்தலிப், அப்துல்காதர், ஜாகீர்உசேன் ஆகிய 5 பேர் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். தூத்துக்குடி நோக்கி சென்றபோது டிரைவர் மதுசூதனனை தாக்கி கயிற்றால் கட்டி போட்டு விட்டு காரை கடத்திச் சென்றனர்.
அப்போது கோவில்பட்டி அம்பேத்கார் சிலை அருகே கார் விபத்துள்ளானது. காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளான காரில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்த வழக்கு கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் முக்கிய குற்றவாளி இமாம் அலி பெங்களுரில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தார். ஹைதர் அலி உள்ளிட்ட மற்றவர்கள் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜாராகி வருகின்றனர். இந்த வழக்கில் நேற்றுடன் சாட்சி விசாரணை முடிவடைந்தது.
வழக்கை ஏப்ரல் 9ம் தேதிக்கு ஓத்தி வைத்த நீதிபதி மஞ்சுளா அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுறும் நிலைக்கு வந்துள்ளது.