ரேஷன் கார்டு, வீட்டு மனைப் பட்டா: அரவாணிகள் எச்சரிக்கை
மதுரை: வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம், உண்ணாவிரதம் இருப்போம் என மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அரவாணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட அரவாணிகள் உள்ளனர்.
இவர்கள் அரவாணிகள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம், அரவாணிகள் நலம், உரிமைகள், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக போராடி வருகின்றனர்.
அரவாணிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. ஆனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் அரசு அறிவித்த எந்த வித சலுகையும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அரவாணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரவாணிகளுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனைப்பட்டா, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வேலை வாய்ப்பு போன்ற எந்த சலுகையும் வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்து வருகிறது என்றும் இதனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டமும் அடுத்த கட்டமாக தற்கொலை போராட்டமும் நடத்த உள்ளதாக அரவாணிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.