ஓகனேக்கலை சுற்றிலும் முள் கம்பி வேலி அமைக்க கோரிக்கை
ஓகனேக்கல்: ஓகனேக்கலுக்குள் கன்னடர்கள் வருவதைத் தடுக்கும் வகையில் அங்கு முள் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்று ஓகனேக்கலில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஓகனேக்கலை தங்களுக்குத்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி சில கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. ஓகனேக்கலுக்குள் ஊடுறுவியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவுகிறது. உச்சகட்டமாக கர்நாடக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பாவே ஓகனேக்கலுக்குள் ஊடுறுவி போராட்டம் நடத்தியதால் தமிழக அரசியல் கட்சிகள் கொதிப்படைந்துள்ளன.
இந்த நிலையில் கர்நாடகத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், ஓகனேக்கலில் நேற்று அனைத்துக் கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஓகனேக்கல் பாதுகாப்புக் குழு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த அமைப்பின் தலைவர் நஞ்சப்பன் போராட்டத்தின்போது கூறுகையில், கர்நாடகத்தினர் தேவையில்லாமல் பிரச்சினை செய்கின்றனர். தமிழகத்திற்குச் சொந்தமான பகுதிக்குள் நுழைந்து உரிமை கொண்டாடுகின்றனர். இதைத் தடுக்க, கன்னடர்கள் ஊடுறுவாமல் இருக்க தமிழக எல்லையில் முள் கம்பி வேலி போட வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாகச் செய்ய வேண்டும் என்றார்.
500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி ஓகனேக்கலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எல்லையில் சிறுத்தைகள் போராட்டம்:
இந்த நிலையில் ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஓகனேக்கலை சொந்தம் கொண்டாடும் கர்நாடகத்திற்கு அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஓகனேக்கலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்திய எடியூரப்பாவைக் கண்டித்து அவரது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இன்று அதிமுக போராட்டம்:
இதற்கிடையே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓகனேக்கல் விவகாரத்தில் தமிழக அரசு மெளனமாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஓகனேக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பித்துரை போராட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுகவினர் இதில் கலந்து கொள்வார்கள் என கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.