5 கி.மீக்குள் ஒரு உயர்நிலை பள்ளி-தென்னரசு தகவல்
சென்னை:ஐந்து கிமீக்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியை அமைக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:
மணியன் (பாமக): தமிழகத்தில் கல்வி காணாமல் போய்விட்டது. எனது தொகுதியில் ஒரு ஆரம்ப பள்ளியில் ஐந்து மாணவர்கள் தான் உள்ளனர். இதற்கு ஒரு தலைமை ஆசிரியர், சத்துணவு ஊழியர்கள் என ஐந்து பேர் பணியாற்றுகின்றனர்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: தமிழகத்தில் கல்வி காணாமல் போக வில்லை. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் ரூ.7,850 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் முயற்சிக் மேற்கொள்ளப்படுகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வராத நிகழ்வுகள் இருந்தால், அவர்களை வர வைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அனைத்து இடைநிலை பள்ளிகளையும், 5 கி.மீக்குள் எந்த பகுதியில் அமைந்திருந்தாலும் அவை அனைத்தையும் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தும் மிகப் பெரிய திட்டத்தை அரசு அமலாக்கவுள்ளது என்றார்.