யூஏஇ: அயல்நாட்டு தொழிலாளர்களுக்கும் பென்ஷன் தர பரிசீலனை
அபு தாபி: ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை தேசிய பென்ஷன் திட்டத்தின்கீழ் கொண்டுவருவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் பென்ஷன் மற்றும் சமூக காப்பீடு பொது ஆணையத்தின் (GAPSI)கீழ் தொழிலாளர்களுக்கு பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் துணை இயக்குனர் அப்துல் ரகுமான் அல் பக்கர் கூறுகையில்,
ஐக்கிய அரபு நாடுகளில் விரைவில் அமலாக்கப்படவுள்ள புதிய பென்ஷன் சேமிப்பு வரைவு சட்டத்தின் ஷரத்துகளை பொது ஆணையம் ஆய்வு செய்துவருகிறது.
வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அந்த சட்ட நுணுக்கங்களைத் தெளிவாக ஆய்வு செய்துவிடுவோம்.
புதிய வரைவு சட்டத்தின்படி, தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் பென்ஷன் திட்டத்துக்கென குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இந்த தொகையை அவர் வேலைபார்க்கும் நிறுவனம் வசூலிக்காது.
பொது ஆணையத்தால் ஒவ்வொரு தொழிலாளருக்கும் தனிநபர் கணக்கு எண் ஒதுக்கப்பட்டு அதில் அவரது சேமிப்பு செலுத்தப்படும். இதற்கென தனி அமைப்பு செயல்படும்.
இது தவிர, பல்வேறு வகையான பென்ஷன் திட்டங்கள் குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. அதன்பிறகு புதிய சட்டவரைவின் ஷரத்துகளுக்கான ஒப்புதல்கள் பெறப்படும்.
பொது மற்றும் தனியார்துறை நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களையும் தேசிய பென்ஷன் திட்டத்தின்கீழ் கொண்டுவர இந்த ஆணையம் விரும்புகிறது.
இந்த விருப்பத்தை ஆணையம்தான் முன்மொழிகிறதே ஒழிய எந்த அரசின் ஆணையோ அல்லது ஆலோசனையோ அல்ல. ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றும் எல்லா தொழிலாளர்களையும் பென்ஷன் திட்டத்தில் சேர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் வழிவகுத்துள்ள நடைமுறைகளின்படியே செய்யப்படுகிறது.
தற்போதுள்ள பென்ஷன் திட்டப்படி, ஒரு தொழிலாளி ரிடையர்மெண்ட் ஆகும்போது மொத்தப் பணிக்காலத்தை கணக்கிட்டு அவரது கடைசி மாத அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கருணைக்கொடை (கிராஜுவிட்டி) வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.