பீகார் கொடுமை-பெண்ணை மரத்தில் கட்டி அடி-உதை, சித்ரவதை
பாட்னா: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வைத்தியம் செய்ய முயன்ற பெண் மந்திரவாதியை கிராமத்தினர் மரத்தில் கட்டி வைத்து அடித்து சித்ரவரை செய்தனர்.பீகார் மாநிலத்தில் சமீபத்தில் திருடனை பைக்கில் கட்டி இழுத்துச் சென்றனர் காவல் துறையினர். தற்போது அங்கு மீண்டும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
நாபத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் மந்திரவாதியான லால்பரி தேவி. இவர் சூனியம் மூலம் வைத்தியம் செய்பவராம். அடல்சாக் டுமாரியா என்ற கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மனோரமா ராய் என்ற பெண்ணுக்கு மந்திரம் போட நேற்று சென்றார்.
அப்போது மனோரமாவின் உடல் நிலை மோசமானது. இதனால் ஆத்திரமடைந்த மனோரமாவின் கணவர் ராம் அயோத்தியா ராய் லால்பரி தேவியை கடுமையாகத் தாக்கினார்.
அவரை ரோட்டில் இழுத்துச் சென்று மரத்தில் கட்டினார்.
அவருடன் ஊர் மக்களும் சேர்ந்து கொண்டு லால்பரியை தாக்கினர். அவரது முகம் மற்றும் தலையில் சுண்ணாம்பு பூசி கொடுமைப்படுத்தினர். வலி தாங்க முடியாமல் லால்பரி கதறித் துடித்தார்.
ஆனால் விடாமல் அவர் அடித்து உதைக்கப்பட்டார். முகம், வாய் உடைந்து ரத்தம் கொட்டிய நிலையிலும் தாக்குதல் நிற்கவில்லை.
ரொம்ப லேட்டாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வநத்போது லால்பரியின் நிலைமை மிக மோசமாக இருந்தது. அவரை ஒரு வழியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து ராம் அயோத்தியா ராயை கைது செய்துள்ளனர்.