பாலம் சீரமைக்கக் கோரி 13 கிராம மக்கள் சாலை மறியல்
விளாத்திகுளம்: சேதமடைந்த பாலங்களை சீரமைக்க கோரி 13 கிராமத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஓன்றிய கீழ்பகுதி கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளாக போக்குவரத்து, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பாலங்கள் மோசமான நிலையில் இருப்பதால் பஸ்கள் வருவதில்லை.
எனவே புதூரை சுற்றியுள்ள பாலங்களை சீரமைக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று புதூர் பஸ் நிலையத்தில் சாலை மறியல் செய்தனர்.
புதூரை சுற்றியுள்ள கந்தசாமிபுரம், காடல்குடி, துரைச்சாமிபுரம், மாவில் ஓடை, லட்சுமிபுரம், ராமசந்திரபுரம், மாதளபுரம், பூதாளபுரம், சென்னம்பட்டி உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.