அரசுக்கு களங்கம் விளைவிக்கும் போலீசார்: காங். பகீர்
சென்னை: தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற வகையிலேயே சில போலீஸ் அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்று தமிழக சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் நடந்த விவாதத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ போளூர் வரதன் பேசுகையி்ல்,
போலீஸுக்குள் கோஷ்டிகள் உள்ளன. இதில் பதவி நீட்டிப்பு போன்ற சலுகைகள் கிடைக்காத அதிகாரிகள் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகின்றனர்.
அடையாறு பகுதியில் எனது வீட்டின் எதிர்ப்புறமாக உள்ள விநாயகர் கோயிலில் திருடு போயுள்ளது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட விலை உயர்ந்த வெள்ளி ஆபரணத்தை யாரோ திருடிவிட்டனர்.
கடவுளுக்கே இங்கே பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இதுகுறித்து புகார் கொடுத்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக போலீஸ் மெத்தனத்துக்கு இது ஓர் உதாரணம்தான் என்றார்.
இதைக்கேட்டதும் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த அதிமுக உறுப்பினர் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரசின் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறு பேசியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக பேசிய அதிமுக உறுப்பினர் குமரகுரு, தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கத்தியால் குத்தப்பட்டார், மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல், திருவாரூர் திமுக நிர்வாகி படுகொலை, எறையூர் ஜாதிக்கலவரத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி என பல சம்பவங்கள் நடந்துவிட்டன என்றார்.
மேலும் அவர், மரபுசாரா தொழிலாளர் வாரியங்களை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்ததை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் என்றபோது,
குறுக்கிட்ட அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, நிர்வாகக் காரணங்களுக்காக அப்படிச் செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு கோர்ட் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்குவதற்காக அப்பீல் மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.