காங்கிரஸ் கூட்டத்தில் லாரி புகுந்தது - 7 பேர் பலி
எர்ணாகுளம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காங்கிரஸ் கூட்டத்தில் தாறுமாறாக வந்த லாரி புகுந்து மோதியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
எர்ணாகுளம் மாவட்டம் மூவட்டுப்புழா அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு நூற்றுக்கணக்கான காங்கிரஸார் கூடியிருந்தனர்.
கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் வந்த ஒரு மணல் லாரி திடீரென தாறுமாறாக ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 7 தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லாரி டிரைவர் காங்கிரஸ் தொண்டர்களால் பிடிக்கப்பட்டு போலீஸீல் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று எர்ணாகுளத்தில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
--