22 ரயில் நிலையங்களில் 'ஷாப்பிங் மால்கள்'!!
புதுக்கோட்டை: சென்னை உட்பட நாட்டின் 22 முக்கிய ரயில் நிலையங்களில் பிரமாண்டமான ஷாப்பிங் மால்கள் அமைக்கப்படும் என ரயில்வேத்துறை இணையமைச்சர் வேலு கூறினார்.
புதுக்கோட்டை வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகத்துக்குள் தற்போது 90 கி.மீ தூரத்துக்கான மீட்டர்கேஜ் பாதைகள் மட்டுமே, அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டியுள்ளது. இதுவும் 2010க்குள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிடும்.
திருச்சியிலிருந்து மானாமதுரை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணியை இரண்டாவது முறையாக ஆய்வு செய்தேன். அகல ரயில் பாதை பணி, காரைக்குடியில் இருந்து மானாமதுரை வரை முடியும் நிலையில் உள்ளது. பணியில் ஏற்பட்ட தாமதத்துக்கு மழை, மேம்பாலம் அமைத்தல், ரயில்வே டிராக்குகளை வெல்டிங் செய்வதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவையே காரணம்.
இந்தப் பணிகளை ஏப்ரலுக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.
இதைத் தொடர்ந்து மே மாத இறுதிக்குள் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படும்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் நடக்கின்றன. கடந்தாண்டு தமிழக ரயில் நிலையங்களை நவீனப்படுத்த, ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளாக பயணிகள் ரயில் கட்டணம் உயத்தப்படாததால், ரூ. 5,000 கோடி ரூபாய் வரை, ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவை சரக்கு கட்டணத்தின் மூலம் சரி செய்யப்படுகிறது.
சென்னை-திருச்சி இடையிலான ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடக்கிறது. அதில், விழுப்புரம் வரை பணி முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் விழுப்புரம்-திருச்சி இடையிலான பாதையும் மின்மயமாக்கப்படும் என்றார்.