'கிடா விருந்து' சாப்பிட்ட 130 பேருக்கு வாந்தி-மயக்கம்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கோவில் விழாவில் சாப்பிட்ட 130 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
நாகர்கோவில் அடுத்த கணபதிபுரம் அருகே திக்குறிச்சியில் அம்மன் கோயில் ஓன்று உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் திருவிழா நடந்தது. அப்போது ஆடு வெட்டி சமைத்து பக்தர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மாலையில் திடீரென திக்குறிச்சியை சேர்ந்த குழந்தைகள் உள்பட 35 பேருக்கு தொடர் வாந்திபேதியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அவர்கள் அனைவரும் கணபதிபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கலெக்டர் ஜோதி நிர்மலா, சுகாதார துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து கிராம மக்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.