மிதவையி்ல் சென்று அறுவடை:நெல்லையில் விவசாயிகள் சோகம்
பாவூர்சத்திரம்: நெல்லை அருகே மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை மிதவையில் சென்று விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் முழ்கி முளைத்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. தற்போது மழை நின்று நல்ல வெயில் அடித்தாலும் வயல்களில் தேங்கிய நீர் வடியவில்லை.
விளைந்து சாய்ந்துள்ள நெற் கதிர்களை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வரமுடியாமல் தவித்த விவசாயிகளுக்கு புதுமையான யோசனை பிறந்தது.
லாரி டியூப்பில் காற்றடித்து அதன் மேல் பெரிய பலகையை கட்டி மிதவைப் படகு போல் தயார் செய்தனர்.
அதில் பெரிய ஓலை பெட்டியை வைத்து அறுவடை செய்த நெற்கதிர்களை குட்டையாக தேங்கிய தண்ணிரில் இழுத்து வருகின்றனர்.
இதை பார்ப்பவர்களுக்கு புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருந்தாலும் விவசாயிகள் படும் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,
நாங்கள் விளைவித்த கதிர்கள் மழையில் நாசமாகி விட்டது. ஏகப்பட்ட நஷ்டத்திலும் மிஞ்சிய கதிர்களை இப்படி அறுவடை செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் இதற்கும் அதிக ஆள்கள் தேவைப்படுகின்றனர். ஒரு நபருக்கு ஒரு நாள் கூலியாக ரூ.200 கொடுக்க வேண்டியதுள்ளது. எனவே இந்த அறுவடையிலும் எங்களுக்கு நஷ்டமே மிஞ்சுகிறது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
உழுதவர் கணக்கு பார்த்தால் உழவடைதான் மிச்சம் என்பார்கள். அதுவும் இவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் பரிதாபம்.