50% ஓட்டுக்கள் பெற்றால்தான் வெற்றி - தேர்தல் ஆணையர் யோசனை
திருச்சியில் நடந்த தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களிடையே பேசுகையில் இந்த யோசனையை கோபாலசாமி தெரிவித்தார்.
அவர் கூறுகையில், முன்பு போல இப்போது அரசியல் நிலைமை இல்லை. கட்சிகளுக்குக் கிடைக்கும் ஓட்டுக்கள் சிதறி விட்டன. பதிவாகும் ஓட்டுக்களில் 30 சதவீத ஓட்டுக்களைப் பெற்றாலே ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று விடக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்படி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக 70 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ளத் தவறி விடுகிறோம்.
இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க ஒரு வேட்பாளர் வெற்றி பெற வேண்டுமானால், குறைந்தது 50 சதவீத ஓட்டுக்களைப் பெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
பீகார், உ.பி. மாநிலங்களில் வெற்றி பெற்ற பெரும்பாலான வேட்பாளர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு சதவீதங்களையே பெற்றுள்ளனர். கேரளா, மேற்கு வங்கம், குஜராத் போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டும்தான் 50 சதவீத ஓட்டுக்களைப் பெற்று வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
விகிதாச்சார பிரதநிதித்துவ முறையை இந்தியாவில் அமல்படுத்துவது சாத்தியமில்லை. அப்படிச் செய்தால் ஓட்டுக்கள் இன்னும் சிதறிப் போய் விடும்.
அதேபோல வாக்களிப்பதை கட்டாயமாக்குவதும் சாத்தியமில்லை. உலக அளவில் 33 நாடுகளில் ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவற்றிலும் சில நாடுகளில்தான் அது சட்டப்பூர்வாக அமல்படுத்தப்படுகிறது.
மக்கள் தாங்களாகவே முன்வந்து ஓட்டுப் போடுவதிலும், தேர்தல்களில் ஆர்வம் காட்டினாலும் மட்டும்தான் நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்த முடியும்.
சிறந்த ஆட்சி வர வேண்டும் என மக்கள் முதலில் விரும்ப வேண்டும். அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் சரிவரப் பயன்படுத்தினாலே போதும், நல்ல ஆட்சி தானாக வரும் என்றார் அவர்.