துபாயிலிருந்து கொண்டு வரப்பட்ட உடல் மாயம்!
திருச்சி: துபாயில் உடல் நலக்குறைவால் இறந்தவரின் உடலுடன், விமானம் மூலம் திருச்சி வந்த உறவினர்கள், திருச்சி வந்து சேர்ந்தபோது, உடலைக் காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
நாகூரைச் சேர்ந்தவர் யூசுப் குத்புதீன். இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். அங்கு கடந்த 25ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இதையடுத்து ஜாகீர் உசேன் உள்ளிட்ட இரு உறவினர்கள் துபாய் சென்று அந்நாட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்து விட்டு உடலுடன் நேற்று இரவு திருச்சி கிளம்பினர்.
இன்று அதிகாலை திருச்சி வந்து சேர்ந்தபோது குத்புதீன் உடலைக் காணவில்லை. இதையடுத்து ஜாகீர் உசேன் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. இதனால் இவர் திருச்சி விமான நிலைய போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஜாகீர் உசேன் கூறுகையில், உடலுடன் ஊர் திரும்ப வந்த நாங்கள் இப்போது வெறும் கையுடன் செல்கிறோம். ஊரில் உள்ளவர்களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று வேதனையுடன் கூறினார்.