ஏப்.4க்குள் டிடிஎச் கட்டணத்தை குறைக்க 'டிராய்' ஆணை
நம் நாட்டில் ஸ்டார் டிவி, ஜீ குழுமம், சோனி-ஒன், சன் நெட்வொர்க், இஎஸ்பிஎன்-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் இலவசமாகவும், பே-சானல்களாகவும் ஒளிபரப்பை வழங்குகின்றன.
இந்த நிறுவனங்களிடமிருந்து பல்வேறு சானல் தொகுப்புகளை கட்டணவாரியாக பெற்று டிஷ் டிவி, டாடா ஸ்கை போன்ற டிடிஎச் ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு வழங்குகின்றனர். ரிலையன்ஸின் பிக் டிவி, பார்தி, சன் டைரக்ட் போன்ற புதிய டிடிஎச் சேவை நிறுவனங்களும் விரைவில் தொடங்குகின்றன.
நாடுமுழுவதும் ஏறக்குறைய 50 லட்சம் பேர் டிடிஎச் சேவை மூலம் பல்வேறு சாட்டிலைட் டிவி சானல்களை கண்டுகளிக்கின்றனர். 7 கோடி பேர் கேபிள் டிவி இணைப்பு மூலம் பார்க்கின்றனர்.
டிடிஎச் சேவையின்கீழ் சானல் தொகுப்பு மாதாந்திர கட்டணம் சராசரியாக ரூ.250 என்ற அளவில் இப்போது உள்ளது. இந்நிலையில் டிடிஎச் ஆபரேட்டர்களிடம் சானல் தொகுப்புக்கு டிவி நிறுவனங்கள் வசூலி்ககும் கட்டணத்தை வரும் 4ம் தேதிக்குள் குறைக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனால் பொதுமக்களுக்கான டிடிஎச் கட்டணமும் கணிசமாகக் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
கண்டிஷனல் ஆக்ஸஸ் சிஸ்டம் இல்லாத நகரங்களில் கேபிள் இணைப்பு மூலம் வாடிக்கையாளர்களுக்கு சாட்டிலைட் சானல்கள் ஒளிபரப்பாகின்றன. தமிழ்நாட்டில் சுமங்கலி, ஹாத்வே போன்ற கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த சேவையை வழங்குகின்றனர்.
இவர்களிடமிருந்து ஒரு வாடிக்கையாளருக்கு இவ்வளவு என்று தங்கள் பே-சானல்களுக்காக குறிப்பிட்ட கட்டணத்தை டிவி நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இந்த பே-சானல் கட்டணத்தில் பாதியளவுக்குதான் டிடிஎச் ஆபரேட்டர்களிடமிருந்து டிவி நிறுவனங்கள் வசூலிக்கவேண்டும் என்று டிராய் உத்தரவிட்டிருந்தது.
இதை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று இப்போது நெருக்கடி செய்துள்ளது. வரும் 4ம் தேதிக்குள் புதிய கட்டணத்தை அமல்படுத்தவேண்டும் என்றும் டிராய் கெடு விதித்துள்ளது.
அதாவது, ஸ்டார் டிவி தனது 14 பே- சானல் தொகுப்புக்காக ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.88 என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், டிடிஎச் ஆபரேட்டர்களிடம் அதே தொகுப்புக்காக ஒரு வாடிக்கையாளருக்கு ரூ.44 என்றுதான் இனி வசூலிக்க முடியும்.
டிராயின் இந்த அதிரடி உத்தரவால் சாட்டிலைட் டிவி நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன. கேபிள் டிவி ஆபரேட்டர்களைக் காட்டிலும் டிடிஎச் ஆபரேட்டர்களிடம்தான் இந்த நிறுவனங்கள் அதிக கட்டணத்தை வசூலித்து வந்தன.
டிடிஎச்சை விட கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களில் வெறும் 25 முதல் 35 சதவீதம்பேரைத்தான் கணக்கு காட்டுகின்றனர்.
ஆனால், டிஜிட்டல் ஒளிபரப்பு காரணமாக டிடிஎச் ஆபரேட்டர்களால் வாடிக்கையாளர்களை குறைத்து காண்பிக்க முடியாது என்பதால் இந்த 'தில்லுமுள்ளு' கணக்கு எடுபடாது.
இதனால் கேபிள் டிவி ஆபரேட்டர்களைவிட டிடிஎச் ஆபரேட்டர்கள் மூலம் டிவி நிறுவனங்கள் கொழித்து வந்தன. இந்த பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது டிராய்.
இஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் ஆகிய பே-சானல்களுக்காக கேபிள் ஆபரேட்டர்களிடம் தலா வாடிக்கையாளருக்கு ரூ.45 என வசூலிக்கப்படுகிறது. டிராய் உத்தரவின்படி டிடிஎச் ஆபரேட்டரிடம் இந்த தொகுப்புக்காக ரூ.22 வசூலிப்பதற்கு பதில் ரூ.50 என வசூலிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தனது பே சானல்களுக்கு கேபிள் ஆபரேட்டர்களிடம் வாடி்ககையாளருக்கு தலா ரூ.113 எனவும், டிடிஎச் ஆபரேட்டர்களிடம் ரூ.83 எனவும் சன் நெட்வொர்க் வசூலிக்கிறது. இனி அப்படி செய்ய முடியாது.
ஏற்கெனவே தொலைதொடர்பு தீர்ப்பாயத்தால், சன் நெட்வொர்க்கின் 16 பிராந்திய சானல்களுக்காக டிடிஎச் ஆபரேட்டர்களிடமிருந்து வாடிக்கையாளருக்கு தலா ரூ.25 மட்டுமே வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிராய் உத்தரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஸ்டார் டிவி அறிவித்துள்ளது. புதிய கட்டணத்தை நிர்ணயித்துவருவதாக ஜீ டிவி தெரிவித்தது.
டிராயின் இந்த கெடுபிடியால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று டிஷ் டிவி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.