என்ஜீனியர் கொலை: ராமர் பிள்ளை மகன் கைது
சென்னை: சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக ஆட்களை வைத்துக் கொலை செய்ததாக 'மூலிகை' பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர் தவிர மேலும் 3 ரவுடிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் சென்னை கிண்டியில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவரும் என்ஜீனியர். தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி தனது கணவரைக் காணவில்லை என்று ஜெயஸ்ரீ போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் நாராயணனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் தடாவில் சாலையோரம் ஒருவரது பிணம் கிடந்ததை ஆந்திர போலீஸார் கண்டறிந்து மீட்டனர். இதுகுறித்து சென்னைக்கும் தகவல் தரப்பட்டது. இதையடுத்து ஜெயஸ்ரீயை அழைத்துக் கொண்டு போலீஸார் தடா விரைந்தனர். அங்கு இறந்து கிடந்தது தனது கணவர்தான் என்று அடையாளம் காட்டினார் ஜெயஸ்ரீ.
இதையடுத்து நாராயணனை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் சிபிஐ வசம் விசாரணை சென்றது. கடந்த 7 மாதங்களாக நடந்து வந்த வழக்கில் துப்பு துலங்கியது.
இக்கொலை தொடர்பாக திலகராஜன், பாலாஜி என்கிற அய்யர், பாலா என்கிற பாலசுப்ரமணியம், சுரேஷ் என்கிற குட்டி சுரேஷ் ஆகியோர் கொண்ட கும்பலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இவர்களில் திலகராஜன், மூலிகை பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளையின் மகன் ஆவார். மற்ற 3 பேரும் பணத்துக்காக எதையும் செய்யும் ரவுடிக் கும்பல்.
நாராயணனிடம் முதலில் இக்கும்பல் ரூ. 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது. மேலும், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டைப் பறித்துக் கொண்டனர். பணம் வீட்டில் இருப்பதாக கூறி சென்ற நாராயணன் பணத்தைத் தராமல் இருந்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல், நாராயணனை அவரது சான்ட்ரோ காரில் கடத்தி தடாவுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்துக் கொலை செய்து சாலையோரம் பிணத்தை வீசி விட்டுச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டை கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.