மார்க்சிஸ்ட் கட்சியில் மணிரத்னம்-சுஹாசினி மகன்
கோவை: பிரபல இயக்குநர் மணிரத்னம்- நடிகை சுஹாசினி நட்சத்திர தம்பதியின் 16 வயது மகன் நந்தன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாநாட்டில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ் திரையுலகிலும், இந்திப் படவுலகிலும் பல வெற்றிப்படங்களை தயாரித்து இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இவரது மனைவி சுஹாசினியும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர்.
இந்த நட்சத்திர தம்பதியின் மகன் நந்தன். தனியார் ரெசிடென்ஷியல் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கோவையி்ல் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் 19வது தேசிய அரசியல் மாநாட்டில் பகிரங்கமாக நந்தன் கலந்து கொண்டு தொண்டாற்றியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதன்முறையாக பத்திரிகைகளுக்கு பேட்டி தந்துள்ள நந்தன், தன் அரசியல் பிரவேசம் குறித்து நிருபர்களிடம் கூறுகையில்,
"மார்க்சிஸ்ட் கட்சியின் மாறாத கொள்கையும், அதன் எளிமையும், ஒன்றோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்துள்ள சிந்தனையும் செயல்பாடும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
எனக்குள்ள புத்தகம் படிக்கும் ஆர்வத்தால்தான் நாட்டில் (இந்தியாவின்) மிகவும் மதிக்கப்படுகின்ற முக்கியமான ஓர் அரசியல் அமைப்பைப் (சிபிஎம்) பற்றி தெரிந்து கொண்டேன். லெனினிஸம் பற்றி நான் எழுதிய துண்டு பிரசார நோட்டீஸை கோவை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விநியோகிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து உள்ளூர் நிர்வாகிகளுடன் தொடர்பு ஏற்படுத்தித் தரும் பணியை கட்சி எனக்கு ஒதுக்கியது" என்று ஆர்வத்துடன் கூறினார்.
ரெட் சல்யூட், காம்ரேட்!