மாயமானதாக கூறப்பட்டவர் உடல் வந்து சேர்ந்தது
சென்னை: விமானத்தில் கொண்டு வரப்பட்டபோது, காணாமல் போனதாக கூறப்பட்ட நாகூர் இந்தியரின் உடல் ஒரு நாள் தாமதத்திற்குப் பின்னர் இன்று சென்னை வந்து சேர்ந்தது.
நாகூரைச் சேர்ந்தவர் யூசுப் குத்புதீன். இவர் துபாயில் வேவலை பார்த்து வந்தார். கடந்த 25ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் இருவர் துபாய் சென்று உடலைப் பெற்றுக் கொண்டு திருச்சிக்கு விமானம் மூலம் நேற்று வந்தனர்.
திருச்சி வந்து இறங்கிய அவர்கள் குத்புதீன் உடலைக் காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்து விமான நிலையத்தில் கேட்டபோது சரிவர பதில் கிடைக்கவில்லை.
இதையடுத்து போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் துபாய் விமான நிலையத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, குத்புதீன் உடல் இருந்த சவப்பெட்டியை விமானத்தில் ஏற்ற மறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து உடலை உடனடியாக இன்று சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை 4.40 மணிக்கு குத்புதீன் உடல் வந்து சேர்ந்தது.
உடலைப் பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சிக்குக் கொண்டு சென்றனர்.