திபெத்தியர்களுக்கு பூட்டியா ஆதரவு
திபெத்திய போராட்டத்திற்கு விளையாட்டு உலகிலிருந்து முதல் முறையாக பைசுங் பூட்டியா ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் நடைபெறும்போது அதை தான் ஏந்திச் செல்ல மாட்டேன் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டு உலகைச் சேர்ந்த ஒருவர் அரசியல் போராட்டம் ஒன்றுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். குறிப்பாக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்ல மாட்டேன் என்று அறிவித்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து பைசுங் பூட்டியா இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில், திபெத்தியர்களுக்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என கருதுகிறேன்.
எனது சிக்கிம் மாநிலத்தில் உள்ள புத்த மத நண்பர்கள் என் மீது பாசம் வைத்துள்ளனர். அங்குள்ள திபெத்தியர்களும் என் மீது அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று உணர்கிறேன்.
எனக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. அதேசமயம் தார்மீக ஆதரவு தர விரும்புகிறேன். எனவே ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் நான் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளேன். இது எனது தனிப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார் பூட்டியா.
பூட்டியாவின் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பறக்கும் சீக்கியர் என்று புகழப்படும் மில்கா சிங் உள்ளிட்ட பல வீரர்கள் பூட்டியாவின் முடிவை விமர்சித்துள்ளனர்.
அதேசமயம், சிக்கிமில் வசிக்கும் திபெத்தியர்கள் (கிட்டத்தட்ட 5000 பேர் உள்ளனர்) பூட்டியாவின் முடிவை வரவேற்றுள்ளனர்.
இந்தியாவில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் வருகிற 17ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. அன்றைய தினம் பூட்டியா, பி.டி.உஷா, மில்காசிங், ரந்தாவா ஆகியோர் ஜோதி ஓட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பூட்டியா விலகி விட்டார். இதனால் வேறு ஒரு வீரரை இந்திய ஒலிம்பிக் சங்கம் சேர்க்கும் எனத் தெரிகிறது.
--