'ஓகேனக்கல்'-பிரதமருடன் பாலு சந்திப்பு
முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி அமைச்சர் டி.ஆர்.பாலு பிரதமரை சந்தித்தார். பின்னர் வெளியில் வந்த டி.ஆர்.பாலு கூறுகையில், 1998ம் ஆண்டு தமிழக அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி காவிரியிலிருந்து பெங்களூர் குடிநீர்த் தேவைக்கும், தமிழக குடிநீர்த் தேவைக்கும் நீர் எடுத்துக் கொள்வது என்று உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பெங்களூர் குடிநீர்த் தேவைக்காக காவிரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
ஆனால் ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது கர்நாடகம். இதுகுறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன்.
தேர்தல் ஆதாயத்திற்காக தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையை கர்நாடகத்தினர் எழுப்புகின்றனர் என்றார்.
முன்னதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பிரதமரைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கர்நாடகத் தரப்பு நியாயத்தை பிரதமரிடம் விளக்கினேன். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இன்னும் ஒரிரு மாதங்களில் கர்நாடகத்தில் புதிய அரசு அமையவுள்ளது.
அதன் பின்னர் தமிழக அரசும், கர்நாடக அரசும் இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவரை தமிழக அரசும், தமிழக மக்களும் பொறுமையோடு இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்காமல் சமாதானமாகப் பேசவேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதியை கேட்டுக் கொள்கிறேன்" என்றார் அவர்.