பணிக்கு 'லேட்': டாக்டர், ஊழியர்கள் சிறைபிடிப்பு-நோயாளிகள் ஆவேசம்
களியாக்கவிளை: தினமும் பணிக்கு தாமதமாக வந்த அரசு டாக்டர் மற்றும் ஊழியர்களை நோயாளிகள் நேற்று சிறை வைத்தனர்.
குமரி மாவட்ட பனச்சமூடு அருகே வெள்ளநடை பகுதி உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தான், சுற்றுவட்டார மலையோர கிராம மக்கள் நம்பியுள்ளனர். தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு வருகின்றனர்.
இந்த ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரும் தினசரி காலதாமதமாகவே பணிக்கு வருகின்றனர்.
இதனால் காலையிலேயே சிகிச்சைக்காக வந்து நிற்கும் நோயாளிகள் பசியுடன் டாக்டர்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.
பல மாதங்களாக இதேநிலை நீடிப்பதால் மக்கள் வெறுத்துப்போய் இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு மேல் டாக்டர்களும் ஊழியர்களும் பணி்க்கு வந்துள்ளனர். அதுவரை காத்திருந்த ஆத்திரத்தில், டாக்டர்கள் மற்றும் ஊழியர்களை சுகாதார மையத்துக்குள் அடைத்து வைத்து மருத்துவமனையின் கேட்டை நோயாளிகள் மூடினர்.
இதுகுறித்து தகவலறிந்த வெள்ளநடை போலீசார் விரைந்து வந்து மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்குவந்த மாவட்ட மருத்துவ அதிகாரி வசந்தா மல்லிகா, காலதாமதமாக வந்த ஊழியர்களை கண்டித்தார்.
இதையடுத்து அங்கு கூடியிருந்த நோயாளிகள், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.