அருப்புக்கோட்டை அருகே தலித்கள் மீது தாக்குதல்-50 பேர் காயம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையே ஜாதிமோதல் ஏற்பட்டதால் அங்கு கடும் பதட்டம் நிலவுகிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தில் அருந்ததியர் மக்களின் திருவிழா நடைபெற்றது.
அதில் பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வலம் வருவது வழக்கம். அப்படி அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வரும் போது சில ஜாதியினர் தங்களது தெரு வழியே வரக்கூடாது என தடுத்துள்ளனர்.
இதனால் இந்த இரு சமூகத்தினர் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர், திருச்சுழி டிஎஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு இரு தரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு அருந்ததிய மக்கள் 30 பேர் மட்டும் சாமி கும்பிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு அம் மக்கள் காவல்துறையினரின் பாதுகாப்போடு சாமி குடும்பிட சென்றனர்.
அப்போது, அங்கு திடீரென 100 க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து, தலித் மக்கள் மீது கற்கள், கம்புகளை கொண்டு கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தலித் மக்கள் 50 பேர் மற்றும் தங்கபிள்ளை என்ற போலீஸ்காரர் ஆகியோர் படுகாயமடைந்தனர். தாக்குதலின் போது காவல் துறை வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.
இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரணி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜமாணிக்கம் உட்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.