ராஜ்குமார்-வீரப்பன்: 'தூது வந்தவர்கள் மறந்தது ஏன்?'-நெடுமாறன்
சென்னை: நடிகர் ராஜ்குமாரை மீட்க என்னிடம் தூது வந்த கன்னட எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும் கன்னட வெறியர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க கூட முன் வராததை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கன்னட வெறியர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. கர்நாடக தமிழர்களின் கலை-பண்பாடு மையமாக திகழும் பெங்களூர் தமிழ் சங்கம் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு சொந்தமான ஒகேனக்கல் மீது அத்துமீறி உரிமை கொண்டாட தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். கர்நாடகத்தில் உள்ள சகல கட்சிகளும் தமிழர்களுக்கு எதிரான நிலை எடுத்துள்ளனர். காவிரி பிரச்சினை, வள்ளுவர் சிலை திறப்பு பிரச்சினை போன்றவற்றில் அடாவடித்தனமாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
கன்னட நடிகரான ராஜ்குமார் வீரப்பனால் சிறைப்பிடிக்கப்பட்ட போது கன்னட எழுத்தாளர்கள்- திரைப்படத்துறையை சேர்ந்த முக்கிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்பட பலர் சென்னைக்கு திரண்டு வந்து என்னை சந்தித்து ராஜ்குமாரை மீட்டுத்தருமாறு வேண்டிக் கொண்டனர்.
நானும், நண்பர்களும் வீரப்பனை சந்தித்து பேசி ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தோம். இதன் விளைவாக கன்னடர்-தமிழர் உறவு ஓங்கி வளரும் என நம்பினோம். ஆனால் அதற்கு நேர்மாறாக கன்னட வெறியர்கள் தொடர்ந்து தமிழர்களை தாக்கி வருகிறார்கள். என்னிடம் தூதுவந்த கன்னட எழுத்தாளர்களும், திரைப்படத் துறையினரும் கன்னட வெறியர்களுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க கூட முன்வராததை வன்மையாக கண்டிக்கிறேன்.
கர்நாடக அரசின் உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் அத்துமீறும் கன்னட வெறியர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். எனவே, கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை பாதுகாக்க மத்திய போலீஸ் படையை அனுப்ப வேண்டும் என மத்திய அரசை வற்புறுத்த வேண்டிய கடமை தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. அதை அவர் செய்வார் என நம்புகிறேன்.
பெங்களூர் தமிழ் சங்கமும், தமிழர்களும் கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் சென்னையில் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் ஏப்ரல் 5ம் தேதி மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்படும். கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும், அனைத்து தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.