சென்னையில் கன்னடர்களின் ஹோட்டல்கள் மீது தாக்குதல்
சென்னை: தமிழகத்தில் நேற்றும் கன்னடர்களுக்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. சென்னையில் கன்னடர்கள் நடத்தி வரும் ஹோட்டல்கள் தாக்கப்பட்டன. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பை தீவிரப்படுத்த மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரில் தமிழ் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள், தமிழ்நாட்டுப் பேருந்துகளை தடுத்து நிறுத்தி மறியல் என கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வழக்கமாக பெங்களூர் உள்பட கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழகத்தில் கண்டனமும், கோபமும் மட்டுமே வெளிப்படுத்தப்படும். ஆனால் இந்த முறை தமிழகத்தில் பதிலடி நடவடிக்ைககள் நடந்து வருகின்றன.
கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஆங்காங்கு தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றன. மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. மதுரையில், கே.எஸ்.ஆர்.டி.சி. புக்கிங் அலுவலகத்தை மூடி, ஊழியரை சிறை பிடித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள கன்னடர்கள் நடத்தும் ஹோட்டல்கள் தாக்கப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள ஹோட்டல் சங்கீதாவை சிலர் கும்பலாக வந்து தாக்கினர். சாப்பிடும் டேபிள்களை அடித்து நொறுக்கினர். டம்பளர்களை தூக்கி வீசினர். ஹோட்டல் போர்டும் தாக்கி உடைக்கப்பட்டது. உணவுப் பொருட்களும் தூக்கி வீசப்பட்டன.
இதேபோல உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சங்கீதா ஹோட்டலின் கிளையும் தாக்கப்பட்டது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உடுப்பி ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு:
சங்கீதா ஹோட்டல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் உள்ள கன்னடர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டுள்ளார்.
உடுப்பி ஹோட்டல்கள், ஹோட்டல் பாம்குரோவ், வெல்கம் ஹோட்டல்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஹோட்டல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கன்னடர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக சங்கத்திற்குப் பாதுகாப்பு:
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடக சங்கத்திற்கும், அதனுடன் இணைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.