தஞ்சையில் பிரபல ரவுடி என்கெளண்டரில் 'காலி'
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் மாணிக்கம் மற்றும் அவரது தந்தை கல்யாண சுந்தரம் ஆகியோர் சமீபத்தில் கொல்லப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை வழக்கில் பிரபல ரவுடி மிதுன் என்கிற மிதுன் சக்கரவர்த்தியை போலீஸார் தேடி வந்தனர்.
மிதுன் மீது 4க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் காவல்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை தஞ்சாவூர் போலீஸார் தஞ்சை - கும்பகோணம் சாலையில், மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மிதுன் அந்த வழியாக வந்தார்.
இதையடுத்து அவரைப் பிடிக்க போலீஸார் முயன்றனர். அப்போது போலீஸார் மீது மிதுன் நாட்டு வெடிகுண்டுகளை வீசித் தப்பினார். இதையடுத்து டெம்போ வேனில் போலீஸார் அவரைத் துரத்தினர்.
இதில் கோடியம்மன் கோவில் அருேக அவரை மடக்கினர். அப்போது இன்ஸ்பெக்டர்கள் கணேசமூர்த்தி, சிவபாஸ்கர் ஆகியோரை அரிவாளால் வெட்டினார் மிதுன். மேலும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை சணடையுமாறு போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அதை மிதுன் பொருட்படுத்தாமல் தப்ப முயன்றார்.
இதையடுத்து மிதுனை இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் படுகாயமடைந்து விழுந்தார்.
இதையடுத்து போலீஸார் அவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மிதுன் உயிரிழந்தார்.
மிதுன், கும்பகோணம் மருதநல்லூரைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி பட்டதாரி ஆவார். திருமணம் ஆகாதவர்.
மிதுன் தாக்கியதில் காயமடைந்த போலீஸார் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதிகாலையில் நடந்த இந்த என்கவுன்டரால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியர் செளந்தரராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.