கொல்கத்தா-கால்வாயில் பஸ் கவிழ்ந்து 20 பேர் பலி
கொல்கத்தா: கொல்கத்தா அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பஸ் பாய்ந்ததில் 20 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.
கொல்கத்தா அருகே வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த பயங்கர பஸ் விபத்தில் 20 பயணிகள் பலியானார்கள். பாபுகாட் என்ற இடத்தில் இருந்து நாராயண்பூர் என்ற ஊருக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. 30 பயணிகள் அதில் இருந்தனர்.
பாபுகாட் அருகே கேஷ்தோபூர் கால்வாய் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பஸ் கவிழ்ந்தது. கால்வாயில் அதிக தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் பாதியளவுக்கு பஸ் மூழ்கியது.
பஸ்ஸுக்குள் குபுகுபுவென தண்ணீர் சூழ்ந்ததால் பயணிகள் உடனடியாக வெளியேற முடியவில்லை. இந்த நிலையில் 20பேர் பரிதாபமாக மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் பஸ்சுக்குள் சிக்கித் தவித்தவர்களை போராடி மீட்டனர்.