புதுச்சேரியிலும் நுழைவுத் தேர்வு ரத்தானது
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக புதுவை சட்டசபையில் இன்று அன்பழகன் (அதிமுக), ஆர்.சிவா (திமுக), சிவக்குமார் (திமுக), ஆனந்தராமன் (பாமக) ஆகியோர் ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. முறைப்படியான சட்டம் மூலம் இது அங்கு நடைமுறைக்கு வந்துள்ளது.
எனவே புதுவையிலும் இதுபோல சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றி முறைப்படி சட்டப்பூர்வமாக நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
பல விஷயங்களிலும் தமிழகத்தைப் பின்பற்றும் புதுவையில், நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
இதற்குப் பதில் அளித்த கல்வி அமைச்சர் எம்.ஓ.எச்.எப். ஷாஜகான் கூறுகையில், இந்த ஆண்டு முதல் புதுவையிலும் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று அறிவித்தார்.