கணவர் இறந்ததாக கூறி பணிக்கொடையை பெண் 'லபக்'
நெல்லை: கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி இறப்புச் சான்றிதழ் கொடுத்து கருணைத் தொகையை ஏப்பம்விட்ட மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி அமிர்தகனி. ஜெயபால் அங்குள்ள கூட்டுறவு மில்லில் வேலை செய்தார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரி்ந்து வாழ்கின்றனர்.
ஜெயபால் தற்போது கோவையில் உள்ள மில்லில் பணியாற்றுகிறார். தனது கணக்கில் கடன் கேட்டு பிஎப் அலுவலகத்தை ஜெயபால் அணுகியுள்ளார். ஆனால், ஜெயபால் இறந்துவிட்டதாகக் கூறி அவரது மனைவி அமிர்தகனி மொத்த பணத்தையும் ஏற்கெனவே வாங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சியடைந்தார்.
போலி இறப்பு சான்றிதழ் மூலம் ஜெயபாலின் பிஎப் பணம் ரூ.30,550 மற்றும் பணிக்கொடை ரூ.48,000த்தையும் அமிர்தகனி பெற்றுக் கொண்டது இதன்மூலம் தெரிந்தது.
இந்த மோசடி குறித்து நெல்லை பிஎப் துணை மண்டல அலுவலகத்திலும், போலீஸ் கமிஷனரிடமும் ஜெயபால் புகார் செய்தார். இதையடுத்து அமிர்தகனி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.