பெங்களூரில் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் மறிப்பு
பெங்களூர்: பெங்களூரில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலை பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் கன்னட அமைப்பினர் மறித்து போராட்டம் செய்தனர்.
இச் சம்பவம் நேற்று நடந்தது.
மேலும், "ஜெய் கர்நாடகா'' என்ற அமைப்பினர் பிடுதியில் இருந்து ஓகேனக்கல் எல்லைக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் பேரணி நடத்தினர்.
முன்னாள் நிழலுலக தாதாவான முத்தப்பா ரய் தான் இந்த அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 500 வாகனங்கள் கலந்து கொண்டன.
உருவபொம்மை எரிப்பு:
ராஜாஜிநகர் நவ்ரங் சர்க்கிள் அருகே கர்நாடக ரக்ஷண வேதிகே அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். கோரமங்களாவில் திரண்ட இந்த அமைப்பினர் கருணாநிதியின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தார்கள்.
எருமை ஊர்வலம்:
முன்னாள் எம்.எல்.ஏ. வாட்டாள் நாகராஜ் ஓகேனக்கல் திட்டத்தை கண்டித்து எருமை மாட்டுடன் விதான சவுதா முன்பு ஊர்வலமாக சென்றார். அப்போது அவருடன் சென்ற அவரது ஆதரவாளர்களும் கண்டன கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.