இன்னொரு ஐரோப்பிய நிறுவனத்தை வாங்கிய டாடா
மும்பை: வெளிநாட்டு நிறுவனங்களை அடுத்தடுத்து வாங்கிவரும் டாடா குழுமம் புதிதாக ஸ்பெயின் நாட்டு கட்டுமான தளவாடங்கள் நிறுவனம் ஒன்றையும் வாங்கியுள்ளது.
முதலில் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனமான கோரஸை வாங்கிய டாடா, சமீபத்தில் போர்ட் வசம் இருந்த லேண்ட் ரோவர் மற்றும் ஜாகுவார் கார் நிறுவனங்களை வாங்கியது.
மேலும் ஓரியண்டல் ஹோட்டல்களையும் வாங்க முயற்சித்து வருகிறது. இதன்மூலம் ஐரோப்பிய, அமெரிக்க சந்தைகளில் புகுந்து விளையாடி வருகிறது இந்தியாவின் டாடா நிறுவனம்.
இந் நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள லெப்ரெரோ கட்டுமான தளவாட தயாரிப்பு நிறுவனத்தை டாடா குழுமத்தின் டெல்கோ கன்ஸ்ட்ரக்ஷன் எக்யுப்மெண்ட் நிறுவனம் (டெல்கான்) வாங்கியுள்ளது.
லெப்ரெரோவின் 60 சதவீத பங்குகளை டாடா வாங்கியுள்ளது. மீதமுள்ள பங்குகளை இப்போது வைத்திருக்கும் பங்குதாரர்களே தொடர்ந்து வைத்திருப்பார்கள்.
கடந்தவாரம் செர்விபிளம் என்ற வெளிநாட்டு கட்டமைப்பு நிறுவனத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கிக் குவிப்பதால் உள்நாட்டு தொழிலில் டாடா கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தமல்ல என்று டெல்கான் நிர்வாக இயக்குநர் ரணவீர் சிங்கா கூறியுள்ளார்.