விலைவாசி உயர்வு: 3வது அணி - இடதுசாரிகள் இணைந்து போராட்டம்
ஹைதராபாத்: 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் இணைந்து ஏப்ரல் 16ம் தேதி முதல் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை கூட்டாக நடத்தவுள்ளன.
தேசிய அளவில் முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரின் கட்சிகள் அடங்கிய 3வது அணி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்பு உருவானது. இந்தக் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஒருவர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கூட்டணியிலிருந்து அவராகவே கழன்று கொண்டு விட்டார்.
இந்த நிலையில் 3வது அணியும், இடதுசாரி கூட்டணியும் தற்போது படு வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போது விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் இரு அணிகளும் தொடர் போராட்டங்களை நடத்தக் களம் குதித்துள்ளன.
இதுகுறித்து 3வது அணியின் ஒருங்கிணைப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய அளவில் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்துடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினேன்.
ஏப்ரல் 16ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் இரு அணிகளும் இணைந்து பல்வேறு வகையான தொடர் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளன.
19ம் தேதி டெல்லியில், கருத்தரங்கம் ஒன்றுக்கும் திட்டமிட்டுள்ளோம். அக்கூட்டத்தில், 300 முதல் 400 சதவீத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதற்கான காரணம் குறித்து விவரிக்கவுள்ளோம். விலைவாசியைக் குறைப்பது எப்படி என்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கவுள்ளோம்.
மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், ஆந்திராவில் உள்ள காங்கிரஸ் அரசும், கருப்பு சந்தையை ஒழிக்க தவறி விட்டன. இதனால் ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்றார் நாயுடு.