திருப்பதியில் தேவஸ்தான ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்
திருமலை: திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக ஆம்புலன்ஸ் சேவையை திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.
திருப்பதி திருமலையில் அருள்மிகு வேங்கடாஜலபதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இவர்களில் பலர் கீழ்திருப்பதிமலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்கின்றனர்.
அப்போது வயதானவர்கள், நோயாளிகளுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்படுவதால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரப்பட்டு வந்தது.
இந் நிலையில், ஆந்திர அரசு மற்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்துடன் இணைந்து புதிய ஆம்புலன்ஸ் வசதியை அவசரகால நிர்வாகம் மற்றும் ஆய்வு நிறுவனம் (இஎம்ஆர்ஐ) திருப்பதியில் தொடங்கியுள்ளது.
தெலுங்கு வருடப்பிறப்பான நேற்று திருப்பதியி்ல் நடந்த விழாவில் '108- அவசரகால ஆம்புலன்ஸ் சேவை' என்ற இநத வசதியை திருப்பதி திருமலை தேவஸ்தான அறக்கட்டளை வாரியத் தலைவர் பி.கருணாகர ரெட்டி தொடங்கி வைத்தார். திருமலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இந்த சேவை ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அப்போது கருணாகர ரெட்டி கூறினார்.
போன் அல்லது மொபைலில் 108 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இந்த சேவையை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேவஸ்தான நிர்வாக அதிகாரி ரமணாச்சாரி தெரிவித்தார்.