அமைச்சர் பதவி ஏற்காதது ஏன்? ராகுல் விளக்கம்
டெல்லி: கட்சிப் பொறுப்பைக் காட்டிலும் அமைச்சர் பதவியில் நாட்டம் இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 6ம் தேதி மத்திய அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. அமைச்சரவை இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பிரதமர் கூறினார். கட்சிப் பொதுச்செயலாளர் பதவியில் உள்ள தனது மகன் ராகுல் காந்தியை அமைச்சராக்கி அழகு பார்க்க சோனியாவுக்கும் விருப்பம்தான்.
இந்தநிலையில் ராகுல்காந்தி அமைச்சர் பதவியில் அமர்த்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர் பதவி இப்போது வேண்டாம் என்று ராகுல் நாசூக்காக மறுத்துவிட்டாராம். தனது ஆசை நிறைவேறாமல் போன விஷயத்தை அமைச்சரவை விஸ்தரிப்புக்குப் பிறகு சோனியா வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து ராகுலிடம் நிருபர்கள் கேட்டபோது அவர், "நான் ஒன்றும் ஹீரோ இல்லை. ஒரு நேரத்தில் ஒரு பணியை திறம்பட செய்ய விரும்புகிறேன். அமைச்சர் பதவி மீது எனக்கு ஆர்வம் இல்லை. தற்போது வழங்கப்பட்டுள்ள கட்சி பொறுப்பான பொதுச் செயலர் பதவியை திறம்பட செய்ய விரும்புகிறேன். அதில்தான் தற்போது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது என்றார்.